மனித உடலின் மத்திய பகுதி எப்படியிருக்க வேண்டும்?
ஆரோக்கியம் நம் கையில் – 12
மனித உடலில் வயிற்றுப் பகுதி தான் மத்தியப் பிரதேசம். உங்கள் மத்தியப்பிரதேசம் (வயிறு) இப்படி உள்ளதா?
நீங்கள் உண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக அசத்து (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும்.
வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்க வேண்டும். வாயு தொந்தரவு எதுவும் இருக்கக் கூடாது. இப்படியிருந்தால் உங்கள் உடலின் மத்தியப் பிரதேசம் (வயிறு) சரியாக உள்ளது என்று அர்த்தம். 100 மார்க்குகள் போட்டுக் கொள்ளலாம்.
மத்தியப் பிரதேசம் (வயிறு) கீழ்க்கண்டவாறு உள்ளதா?
காலையில் பசியிருக்காது. வேறு வழியில்லாமல் உணவை உண்போம். உண்ட உணவு ஜீரணமாகாது. வயிறு உப்புசமாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி வரும். முதுகுவலி வரும். உட்கொண்ட ஆகாரம் செரிக்காமலேயே மலமாக வெளியேறும். முகம் உப்பிசமாக இருக்கும்.
இன்று நிறைய மனிதர்களின் மத்தியப் பிரதேசம் (வயிறு) மேற்குறிப்பிட்டவாறு தான் இருக்கின்றது.
வயிறு பானை போல் உள்ளது. அதில் கடம் வாசிக்கலாம். அப்படியிருப்பவர்கள் இனி வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு தீர்வு யோகக்கலையில் உள்ளது. யோகாவும் நமது பழக்க வழக்கங்களையும் சற்று மாற்றிக் கொண்டால் போதும். எல்லா வியாதிக்கும் மூலகாரணம் வயிறு தான். இந்தப் பகுதி சுத்தமாக இருந்தால் உடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
சாப்பிடும் பொழுது கவனம்:
பொதுவாக மனிதர்கள் வீட்டிலும் சரி, வெளியில் ஹோட்டலில் சாப்பிடும் பொழுதும் கவனத்தை சாப்பாட்டில் வைப்பதில்லை. குடும்ப விஷயங்கள் போன்றவற்றைப் பேசிக் கொண்டே சாப்பிடுகின்றோம்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் எண்ணும் உணர்வுகளுக்கு ஏற்ப உடலில் உமிழ்நீர் சுரக்கும். சாப்பிடும் பொழுது கவனம் சாப்பாட்டில் இருந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகள் வாயில் உணவு மென்று கொண்டிருக்கும் பொழுதே வயிற்றில் சுரக்கும். ஆனால் நீங்கள் வாயில் உணவை வைத்து வேறு விஷயம் பேசும் பொழுது, அந்த விஷயத்திற்கேற்ப உமிழ்நீர் சுரக்கின்றது. உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் உண்ட உணவு ஜீரணமாவதில்லை.
முதல் பழக்கம் சாப்பிடும் பொழுது வேறு கவனச் சிதறல் இருக்கக்கூடாது. சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தவும். இதை நமக்கு பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளார்கள். வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை. இனிமேலாவது பயன்படுத்துங்கள்.
போதிய அளவு நீர் குடித்தல்:
சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து மூன்று டம்ளர் நீர் அருந்தவும். பின்பு தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் நீர் மறக்காமல் அருந்தவும். பெரும்பாலானோர் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உணவு ஜீரணமாகாமல் மத்தியப் பிரதேசம் (வயிறு) பாலைவனமாகி விடுகின்றது. சில நபர்கள் ஒரு கவளம் சாப்பாடு உண்ட உடன் அரை டம்ளர் தண்ணீர் அருந்துவர். இப்படி சாப்பாட்டின் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவர். இதுவும் அஜீரணமாக, வயிறு உப்புசமாக இருக்கும். எனவே சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து நீர் அருந்தவும். தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது நீர் பருகவும். தண்ணீர் குடிக்கும் பொழுது வேகமாக, மடமடவென தண்ணீர் குடிக்கக் கூடாது.
தண்ணீரை சாப்பிடவும். அது எப்படி? அவ்வளவு மெதுவாக, பொறுமையாக ஒவ்வொரு மடக்காக உள் இறங்கியவுடன் அடுத்த அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் வேகமாக குடித்தால் சிலருக்கு தும்மல் வந்து மூக்கு வழியாக தண்ணீர் வரும். நம் உணவுக்குழாய் மிக மென்மையானது. மூச்சுக்குழாயும் மென்மையானது. வேகமாக தண்ணீர் குடிக்கும் பொழுது மூச்சுக்குழாய், உணவுக்குழாய் இரண்டும் திறந்துவிடும். அதனால் மூச்சுக்குழாயில் தண்ணீர் செல்வதால் மூக்கில் நீர் வரும்.
சரியான நேரத்தில் உணவு:
காலை 9.00 மணிக்குள் காலை சிற்றுண்டி, மதியம் 1.00 மணி முதல் 1.30 மணிக்குள் மதிய உணவு, இரவு 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் இரவு உணவு உண்ண வேண்டும். பசிக்கின்ற பொழுது உணவு எடுக்காமல் 11.00 மணிக்கு காலை உணவு எடுப்பது வயிறு முழுக்க வாயு சூழ்ந்து வயிறு உப்பிசமாகிவிடும். இதை மாற்றிக் கொள்ளுங்கள்.
வயிற்றில் புண் (அல்சர்) குடல்புண் அனைத்திற்கும் சரியான நேரத்தில் சாப்பிடாததே காரணமாகும். இந்த அல்சர் அதிகமாகி வயிற்றில் கேன்சர் வரும் அளவு சிலர் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே சரியான நேரத்தில் பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும்.
24 மணி நேரமும் உடல் நம்முடன் பேசுகின்றது. நாம் அதனை அலட்சியம் செய்வதால் நோய் வருகின்றது. நம் உடல் தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
சாப்பாட்டை தேர்ந்தெடுத்தல்:
நல்ல சத்தான ஆகாரம் பழவகைகள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழம் இவ்வாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும். தினமும் மாமிசம் சாப்பிடுவது, எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். பசிக்காக சாப்பிட வேண்டும். ருசிக்காக அல்ல. உணவு என்பது இந்த உடலுக்கு மருந்து போன்றதாகும்.
மேற்கூறிய பண்புகளில் மாற்றம் வேண்டும். அதன் பின் சரியான யோகாசனத்தையும் செய்தால் நிச்சயம் நமது வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கும்.
செரியாமை (அஜீரணம்) மலச்சிக்கல் நீக்கும் தனூராசனம் செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
- இருகால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இறுக்கமாக பற்றி பிடிக்கவும்.
- தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி மூச்சை உள் இழுத்து தூக்கவும்.
- அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
- மூச்சை அடக்கி 15 விநாடிகள் இருக்கவும்.
- பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும்.
- சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும்.
- மூன்று முறைகள் தினமும் செய்யவும்.
முக்கிய குறிப்பு:
கல்லீரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது. பெண்கள் கருவுற்ற சமயம் செய்யக்கூடாது. இருதய பலவீனம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
தனூராசனத்தின் பொதுவான பலன்கள்:
- வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது.
- அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
- உடல் எடை, தொப்பைக் குறையும். வயிற்றுப் பொருமல், உப்புசம், வாயுக் கோளாறுகள் குணமடையும்.
- முதுகுத்தண்டு பலப்படும்.
- நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும்.
- நீரிழிவு நோயை குணப்படுத்தும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்கச் செய்யும்.
- கூன் முதுகை நிமிர்த்துகின்றது.
- இரத்த ஓட்டம் சிறப்பாக செயல்படும்.
- பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிற்றைக் குறைக்கும்.
- மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
- மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாகும். சோம்பல் நீங்கும். அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும்.
ஒரு ஆசனத்தில் எவ்வளவு பலன்கள் பார்த்தீர்களா? தனூர் என்றால் வில். உடலை வில் போல் வளைத்தல். சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரீனல், கோணாடு சுரப்பிகள் மிகச்சிறப்பாக இயங்கச் செய்யும்.
நாம் முதலில் இந்த ஆசனத்தைப் பயில வேண்டும். பின்பு நம் குழந்தைகளுக்கும் இதனை இளம் வயதில் பயிற்றுவிக்க வேண்டும். நாம் (தாய், தந்தை) பயிலாமல் குழந்தையை மட்டும் யோகாசனம் பயிலுங்கள் என்று கூறுவது தவறு. முதலில் நம் குழந்தைகளுக்கு நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
இளம் வயதிலேயே இந்தக் கலையை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தால் நிச்சயமாக வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமான உடல் மட்டுமல்ல, நல்ல எண்ணங்கள் கொண்டவராய், மனதாலும் ஆரோக்கியமாக வாழலாம். காலை எழுந்தவுடன் இந்த உடல், மன இயக்கத்திற்கு இருபது நிமிடங்கள் ஒதுக்கி விடுங்கள்.
மத்தியப் பிரதேசம் (வயிறு) சிறப்பாக இயங்க இறுதியாக ஒன்றை மட்டும் கவனியுங்கள்.
திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் கூறிய அருமையான குறள் இதோ
“மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
நாம் காலையில் உண்ட உணவு ஜீரணமாகி, பசிக்கின்றதா என்பதை அறி்ந்து உணவு உட்கொண்டால் இந்த உடலுக்கு மருந்து என்று ஒன்று தேவையே இல்லை என்று கூறுகின்றார். ஒரு உணவு உண்டபின் அது ஜீரணமாகாமல் மேலும் அடுத்த உணவு உண்ணும் பொழுது தான் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமத்தில் மாறுதல் ஏற்படும்.
எத்தனையோ வருடத்திற்கு முன்பு திருவள்ளுவர் மனிதனின் மத்தியப் பிரதேசத்தை (வயிறை) எப்படி வைத்துக் கொண்டால் வியாதியில்லாமல் வாழலாம் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
எனவே நாம் யோகாசனத்துடன் உண்ணும் உணவை சரியான முறையில் ஜீரணமானவுடன் எடுத்துக் கொண்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கி வளமாக வாழலாம்.