மன அழுத்தம் போக்கும் சாந்தி ஆசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 10
இரு நபர்கள் பேசிக் கொண்டார்கள். எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்யப் போகிறேன் என்றார் ஒருவர். மற்றொருவரும், ஆம் எனக்கும் வாழ பிடிக்கவில்லை நானும் தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டேன் என்றார். இருவரும் யார் என்றால் ஒருவர் U.K.G. படிக்கிறார். மற்றொருவர் L.K.G. படிக்கின்றார். ஆம், இன்றைய உலக வாழ்க்கை, வாழும் விதம் இப்படி தானிருக்கின்றது. மன அழுத்தம், டென்ஷன், கவலை, கோபம் போன்றவை U.K.G. யிலேயே ஆரம்பித்து விடுகின்றது. அப்படி என்றால் ஒரு திருமணமான குடும்பத் தலைவன், தலைவிக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும்?
இந்த மன அழுத்தத்தினால் தான் மனிதர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயத்தில் ஓட்டை, கழுத்து வலி, முதுகுவலி, நரம்பு பலவீனம், ஒற்றைத் தலைவலி போன்ற பல நோய்கள் வருகின்றன. பொதுவாக எல்லா வியாதிக்கும் அடிப்படைக் காரணம் மன அழுத்தம் தான்.
மன அழுத்தம் ஏற்பட்டவுடன் நமது மூச்சோட்ட மண்டலம் பாதிக்கப்படுகின்றது. மூச்சின் இயக்கம் மிக அதிகமாக வெளியேறும். அதனை தொடர்ந்து ஜீரண மண்டலம் பாதிக்கப் படுகின்றது. அதனைத் தொடர்ந்து ரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுகின்றது.
மனிதனின் பண்புகளில் மாற்றம்
பொதுவாக பொறாமை குணம் உண்டு. மற்றபடி நல்லவர் என்று கூறுவர். சிலர் பொறுமை மட்டும் இவரிடம் கிடையாது, மற்றபடி நல்லவர் என்று கூறுவர். எல்லா மனிதர்களிடமும் தீய பண்புகள் ரத்தத்துடன் கலந்துள்ளது. இதனை அறவே அழிக்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் யோகாசனங்களை முறையாக பயில வேண்டும்.
மனித உடலில் மூன்று குணங்கள் உள்ளன. தமோ குணம், ரஜோ குணம், சத்வ குணம்.
தமோ குணம் காமம், பேராசை, கோபம், பொறாமை, சோம்பல் போன்ற கீழ்த்தரமான பண்புகள்.
ரஜோ குணம் நல்ல பண்புகள். ஆனால் டாம்பீகமாக செயல்படுவர்.
சத்வ குணம் பொறுமை, அமைதி, பேரன்பு போன்ற நற்குணங்கள்.
இதனை அதிர்வலைகள் என்று அழைக்கின்றோம். ஒருவருடைய உடலில் முக்குணங்களின் அதிர்வலைகள் ரத்தத்துடன் கலந்திருக்கும். யோகாசனங்கள் செய்யும் பொழுது தான் தமோ அதிர்வலைகள் படிப்படியாக மாறி, ரஜோகுண அதிர்வலைகள் வரும். பின்பு சத்வகுண அதிர்வலைகள் அதிகமாகி விடும். அப்பொழுது உடலில், மனதில் மன அழுத்தம் என்பது நிச்சயமாக இருக்காது.
மன அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள்
சஸங்காசனம்:-
- விரிப்பில் கிழக்கு நோக்கி முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- இப்பொழுது மூச்சை மெதுவாக வெளியிட்டுக் கொண்டே குனிந்து நெற்றி தரையில் படும்படி வரவும்.
- கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
- சாதாரண மூச்சில் ஒரு நிமிடம் இருக்கவும்.
இந்த ஆசனம் செய்யும் பொழுது நமது மூளைப்பகுதி, அதற்கு கீழ் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரி, பீனியல் சுரப்பியிலுள்ள அழுத்தங்கள் வெளியேறுவதாக எண்ணவும். மூச்சை வெளிவிட்டு நெற்றி தரையில் படும்பொழுது உண்மையில் மூளைப்பகுதி அதற்கு கீழ் உள்ள இடத்தில் உள்ள டென்ஷன் வெளியேறுவதை உங்களால் உணர முடியும். மேற்குறிப்பிட்ட சஸங்காசனத்தை மூன்று முறை காலையிலும், மாலையிலும் செய்து வரவும்.
சாந்தி ஆசனம்:-
இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக்கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
செய்முறை:-
- விரிப்பில் கிழக்கு திசையில் தலை வைத்து மேற்கில் கால் வைத்து கை, கால்களை அகற்றி படுத்துக் கொள்ளவும்.
- தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்துக் கொள்ளவும். கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும். (படத்தை பார்க்கவும்).
- கண்களை மூடிக் கொள்ளவும்.
- இப்பொழுது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்க்கண்டவாறு பயிற்சி செய்யவும்.
- உங்கள் மனதை தலை வெளிதசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன். அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணத்தினால் ரிலாக்ஸ் செய்யவும்.
- பின்பு உங்கள் மனதை தொண்டை வெளிசதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
- பின்பு உங்கள் மனதை தோள்பட்டை பகுதியில் நிலைநிறுத்தி அந்த தசைகளிலுள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன் என்று மனதால் தளர்த்திக் கொண்டே வரவும்.
- பின்பு உங்கள் மனதை இருதயத்தின் வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.
- பின்பு உங்கள் மனதை வயிற்று வெளி தசைகளில் நிறுத்தி அதிலுள்ள டென்ஷன், அழுத்தங்களை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணவும்.
- பின் வலது கால் வெளி தசைகள், இடது கால் வெளி தசைகளில் நிலை நிறுத்தி ரிலாக்ஸ் செய்யவும்.
- தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்து அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்யவும்.
- இப்பொழுது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்தப் பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும். மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் உள்ளது. உங்கள் ஆழ் மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.
- பின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைராய்டு பகுதியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும். பின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும். எனது இதயத்துடிப்பு சீராக இயங்குகின்றது. அந்தப் பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.
- பின் வயிற்று உள் பகுதியில் சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலைநிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும். பின் வலது கால் உள் பகுதி, இடது கால் உள் பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதான எண்ணி தளர்த்தவும்.
மூச்சில் கவனம்
இப்பொழுது இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளியிடும் பொழுது நம் உடல், மனதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பொழுது இயல்பாக நடைபெறும் மூச்சோட்டத்தை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். மூச்சு இயற்கையாக நடைபெறுகின்றது. அந்த மூச்சு உள் வருவதையும் வெளியே செல்வதையும் மூன்று நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும். பின்பு அவசரப்படாமல் மெதுவாக இரு கால்களையும் சேர்க்கவும். பின் இரு கைகளை மெதுவாக ஒன்று சேர்க்கவும். பின் 10 விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு இடது பக்கம் மெதுவாகத் திரும்பி எழுந்து உட்காரவும்.
பலன்கள்:
இந்த சாந்தி ஆசனம் தான் மிகக் கடினமான ஆசனம் என்று யோகிகள் கூறுவார்கள். மற்ற கடினமான ஆசனங்களை செய்துவிடலாம். ஆனால் இதில் உங்கள் மனதை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, மனதிற்கு கட்டளையிட்டு அதனை செயல்படுத்த வேண்டும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது 100 சதவீத மனோலயம் இருக்காது. கவலை வேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முழுமையான பலன் கிட்டும்.
மனிதனின் அனைத்து வியாதிக்கும் மன அழுத்தம், கவலை தான் காரணம். மன அழுத்தத்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக இயங்காமல் பல வகையான நோய்கள் வருகின்றது. இந்த சாந்தி ஆசனம் ஒன்று தான் உடல் வெளி தசைகள், உடலுக்குள் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலுள்ள டென்ஷனை வெளியேற்றி மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.
ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும். உடலுக்கு பிராணசக்தி கிடைக்கின்றது. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இயங்கும். நரம்புத் தளர்ச்சி, படபடப்பு நீங்கும். கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும். அடி முதுகு வலி, கழுத்து வலி நீங்கும். சுறு சுறுப்பாக திகழலாம்.