நலம் தரும் நாற்காலி யோகா
வாய்ப்புண், நாக்குப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவற்றை விரட்டும் மாதங்கி முத்திரை
இன்று பலருக்கும் வாயிலோ நாக்கிலோ புண்கள் வருகின்றன. மருந்துகள் பல எடுத்தாலும் கூட அவை குணமாவதில்லை. அதேபோல சிலர் அருகில் நின்று பேசக்கூட நம்மால் முடியாது. வாய் துர்நாற்றம் அப்படி நம்மை அசௌகரியப்படுத்தும். இதற்கு முழுமையான தீர்வு கிடைக்காமல் பலரும் வருந்துவதுண்டு. இது போன்ற பிரச்சனைகளுக்கு மிக எளிமையான பயிற்சிகளின் மூலமே முழுமையான தீர்வு கிடைக்கும்! அவற்றைப் பற்றி பார்க்கலாமா…
முதலில் சில அடிப்படையான உடல் & மன ரீதியான விஷயங்களை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டு, பிறகு இந்தப் பயிற்சியைத் தொடங்கலாம்.
நாம் உண்ணும் உணவு, வயிற்றில் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் பல ரசாயன மாற்றங்கள் ஆகி, ‘சத்து’ தனியாகவும் ‘அசத்து’ தனியாகவும் பிரிகிறது. இதற்கு ஒவ்வொரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டும். அதேபோல் நுரையீரலும் (சுவாச மண்டலம்) நன்றாக இயங்க வேண்டும்.
மனித உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்குவதற்கு முதலில் அவனுடைய மனம் சாந்தமாக இருப்பது அவசியம். மனதில் அழுத்தம், கவலை, பதட்டம் ஏற்படும்போது, முதலில் நம் சுவாச மண்டலம் (நுரையீரல்) பாதிக்கப்படும். அதனால் சிறுகுடலும் சரியாக இயங்காது. இதனால் உண்ட உணவும் ஜீரணமாகாமல் குடலில் சிறு சிறு கழிவுகளாக தங்கிவிடும். இவையே நாளாக நாளாக ஒரு துர் வாசனையை கிளப்புகின்றன. ‘சுவாசம்’ என்பது நம் உடல் முழுவதும் இயங்க வேண்டும். சிலருக்கு வயிற்றுப் பகுதியில் புண்களும் உருவாகலாம். அந்த மூச்சு, வாய் வழியே வரும்போதும், பேசும்போதும் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. மண்ணீரலின் இயக்கம் குறையும் போது தான் நாக்கில் புண் வருகிறது. எனவே இதற்கு நம் அன்றாட வாழ்வில் சிலவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அவை…
பசித்து புசித்தல்….
நன்கு பசி எடுக்கும் பொழுது மட்டுமே சாப்பிட வேண்டும். நாம் ஏற்கனவே உண்ட உணவானது சிறுகுடல், பெருங்குடலில் ஜீரணமாகாதபோது அதை வெளியேற்ற உடல் உள்ளுறுப்புகள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் நன்கு பசி எடுக்காது. ஆனால், நேரத்திற்கு நாம் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தில், மீண்டும் சாப்பிடும்போது, ஏற்கனவே உண்ட உணவு ஜீரணமாகாமல் இருக்கும் நிலையில், மீண்டும் உணவு உள்ளே செல்வதால், கழிவுகளின் தேக்கம் குடல்களில் அதிகமாகி, அதுவே குடல் புண்கள் உருவாக வழி செய்கிறது. எனவே பசியறிந்து உண்ணுங்கள்.
எடுக்கும் உணவு……
நல்ல சாத்வீகமான சுத்தமான உணவுகளை எடுக்க வேண்டும். முடிந்தவரை காய்கறிகள், கீரைகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி, மீன், ஆடு, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகளைத் தவிர்த்தால், வாய்ப்புண், நாக்குப்புண் மற்றும் குடல் புண்கள் வராமல் வாழலாம். அதிக காரம், புளிப்பு, உப்பையும் தவிர்க்கவும். இத்துடன் எளிய யோகப் பயிற்சிகள், முத்திரைகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!
முத்திரை எப்படி செய்வது?
‘முத்திரை’ என்பது நமது கைவிரல்களை வைத்து, விரல் நுனிகளில் லேசான அழுத்தம் கொடுத்து செய்யும் எளிய பயிற்சியாகும்! இந்தப் பயிற்சியின் போது நாம் நமது விரல்நுனிகளை இணைக்கவில்லை. மாறாக, பஞ்சபூதங்களை இணைக்கிறோம். ஆம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்தும் நமது விரல்களில் பரிணமிக்கிறது. ஒவ்வொரு விரலும் நமது உடலில் ஒரு மூலகத்தை கட்டுப்படுத்துகிறது!
- கட்டை விரல் – நெருப்பு
- சுண்டு விரல் – நீர்
- மோதிர விரல் – நிலம்
- நடு விரல் – ஆகாயம்
- ஆள்காட்டி விரல் – காற்று
சுத்தப்படுத்தும் முத்திரை:
இதன் பெயரே ‘சுத்தப்படுத்தும் முத்திரை’ தான்! அதாவது, குடலை சுத்தப்படுத்தும் முத்திரை. சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை இது நன்றாக சுத்தப்படுத்தவிடும். குடல் சுத்தமானால் வாய்ப்புண், நாக்குப்புண் வராது. வாயில் துர்நாற்றமும் ஏற்படாது.
- நாற்காலியில் நிமிர்ந்து அமருங்கள்.
- கண்களை மூடி, மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- ஒரு நிமிடம் இவ்வாறு செய்யுங்கள்.
- பிறகு எல்லா விரல்களையும் சேர்த்து கீழ் நோக்கி வைக்கவும்.
- கட்டை விரலை மோதிர விரலின் முதல் பகுதி நடுவில் (கீழிருந்து முதல் பகுதி) லேசாகத் தொட்டு அழுத்தவும்.
- இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். (படத்தைப் பாருங்கள்)
- இதே போல 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
- காலை / மதியம் / இரவு என சாப்பிடுவதற்கு முன்பாக 2 நிமிடம் இந்தப் பயிற்சியை செய்யுங்கள்.
மாதங்கி முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து, முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமரவும்.
- இப்போது மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- பிறகு கண்களைத் திறந்து, இரு கைகளின் விரல்களையும் சேர்த்து, நடுவிரலை மட்டும் நேராக இருக்கும்படி வைக்கவும்.
- மற்ற விரல்களை படத்தில் உள்ளது போல வைத்து, கைகளை வயிற்றுக்கு அருகில் வைக்கவும்.
- இதே நிலையில் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும்.
- பிறகு கைகளை மெதுவாக சாதாரண நிலைக்குக் கொண்டு வரவும்.
இந்த இரு முத்திரைகளின் பலன்கள்…..
- குடல்களில் கழிவுகளையும், புளிப்புத்தன்மையையும் அகற்றும். சிறுகுடலும், பெருங்குடலும் சுத்தமாக இயங்கும்.
- குடற்புண்கள் வராது. வயிற்றிலும் புண்கள் ஏற்படாது. குடல் சூடு சமமாகும்.
- அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
- வயிற்றில் கட்டிகள் வராமல் பாதுகாக்கப்படும். அதனால் வாய் துர்நாற்றம் வராது.
- நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது.
- குடல் இறக்கம் ஏற்படாது.
- அடிக்கடி வயிற்றுவலி வருவதும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் தடுக்கப்படும்.
- குடல் சுத்தமாவதால், உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்கும். உடல் கழிவுகள் சரியாக வெளியேறும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
எளிய உணவுமுறை….
புதினாவையும், முட்டைக்கோஸையும் உணவில் அடிக்கடி சேர்க்கவும். கறிவேப்பிலையை மோரில் ஊறவைத்து சாப்பிடவும். கொத்துமல்லித்தழையில் துவையல் அரைத்து சாப்பிடவும்.